பெங்களூரு,
கர்நாடகத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனாலும் ஏராளமான வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். பல லட்சம் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் நிலுவையில் உள்ள அபராத தொகையை வசூலிக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடந்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 50 சதவீத தள்ளுபடி சலுகையில் அபராத தொகையை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறை மீறல் அபராதத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வரை 20 நாட்கள் கர்நாடகம் முழுவதும் 19 லட்சத்து 13 ஆயிரத்து 659 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.55 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.