தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கு 52 லட்சம் தடுப்பூசி - 3 நாளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை

அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கு 52 லட்சம் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு ஜனவரி 16-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 28 கோடியே 50 லட்சத்து 99 ஆயிரத்து 130 டோஸ் தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இவற்றில் நேற்று காலை நிலவரப்படி, 25 கோடியே 63 லட்சத்து 28 ஆயிரத்து 45 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

தற்போது மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 2 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 85 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சத்து 85 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரையில் 27 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து 783 டோஸ் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 52 லட்சத்து 26 ஆயிரத்து 460 தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT