தேசிய செய்திகள்

56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டி: இந்தியா 5 தங்கம் வென்று அசத்தல்

சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் 87 நாடுகளை சேர்ந்த 381 மாணவர்கள் பங்கேற்றனர்.

புது டெல்லி,

கொலம்பியாவின் புகாரமங்காவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய சார்பில் கலந்துகொண்ட 5 உறுப்பினர்களும் தங்க பதக்கங்களை வென்று, அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் இளம் இயற்பியலாளர்கள் நாட்டிற்கு அளவற்ற பெருமையை சேர்த்துள்ளனர்.

இதில், 87 நாடுகளை சேர்ந்த 381 மாணவர்கள் பங்கேற்றனர். இது சர்வதேச அளவில் அறிவியல் கல்வி சிறப்பில் நாட்டின் வளர்ந்து வரும் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பதக்கம் வென்ற இந்தியர்கள்:

1) கனிஷ்க் ஜெயின் - புனே, மராட்டியம்

2) ரித்தேஷ் அனந்த் பெண்டேல் - இந்தூர், மத்திய பிரதேசம்

3) ரிஷித் கார்க் - துவாரகா, புது டெல்லி

4) ஷ்ரேஷ் சுரையா - மும்பை, மராட்டியம்

5) ஸ்வரித் ஜோஷி - அகமதாபாத், குஜராத்

அறிவியல் கல்வி மையம்

இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பெருமைமிக்க பாரம்பரியத்தை இந்த வெற்றி மேலும் விரிவுபடுத்துகிறது. அணுசக்தி துறையின் கீழ் உதவி பெறும் நிறுவனமான டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (டி.ஐ.எப்.ஆர்.) தேசிய மையமான ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (ஹெச்.பி.சி.எஸ்.இ.) தான் இந்தியாவின் இந்த ஒலிம்பியாட் திட்டத்தை முன்னெடுத்து நடத்துகிறது.

பாராட்டு

இந்த சாதனை, அத்திட்டத்தின் வலிமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.இதற்கிடையே, போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு அணுசக்தி துறை செயலாளரும், அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டர் அஜித் குமார் மொஹந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது இளம் இயற்பியலாளர்களின் இந்த மகத்தான சாதனை, நாட்டிற்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும் என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.