மும்பை,
மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் சாலைகள், குடியிருப்புகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையில் மன்குர்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கனமழை காரணமாக இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் குடியிருப்பில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.