வதோதரா
குஜராத்தில் 62 சிங்கங்கள் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி காரணம் வெளியிடப்பட்டு உள்ளது.
குஜராத் சட்டசபையில் மூத்த காங்கிரஸ் தலைவரான ஷைலேஷ் பார்மர் எம்.எல்.ஏ. கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளித்து பேசிய வனத்துறை மந்திரி அர்ஜுன் மோத்வாடியா, குஜராத்தில் ஜூலை 31-ந்தேதி வரையிலான கடந்த ஓராண்டில் 62 சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார். இதில் தலா 17 ஆண் மற்றும் பெண் சிங்கங்களும், 28 குட்டிகளும் அடங்கும் என அவர் கூறினார்.
விலங்குகளுக்கு நோய்த்தொற்றை தடுப்பதற்காக மாநில வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் இதன் ஒரு பகுதியாக சிங்கங்களுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் உண்ணி அகற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால் நடைகளுக்கும் நோய் பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
இதில், நிம்மோனியா, ரத்த சோகை, செப்டிசீமியா, பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணங்களால் சிங்கங்கள் உயிரிழந்துள்ளன என்று தெரிய வருகிறது. இவை தவிர, முடக்குவாதம், குடல்புழு பாதிப்பு, என்செபாலிட்டிஸ், திடீர் அதிர்ச்சி உள்ளிட்ட பிற காரணங்களாலும் அவை மரணித்துள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் இருந்து தெரிய வந்துள்ளது.
சமீபத்திய 2025-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் 891 ஆசிய வகை சிங்கங்கள் உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.