புதுடெல்லி,
தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015 வரை சில மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அதில் தமிழக அரசு கடைபிடிக்கும் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக செய்து வருவது போல மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்றி அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி அடிப்படையில் உரிய மதிப்பெண் பெற்ற மாணவமாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி இருந்தனர். பின்னர் விரிவான இறுதி விசாரணைக்காக வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.