தேசிய செய்திகள்

மாசடைந்த கிணற்று நீரை குடித்த 80 பேர் மருத்துவமனையில் அனுமதி

கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம் ராட்லம் மாவட்டத்தின் அசம்பூர் தோடியா கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் குடித்த 80 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாசடைந்த கிணற்று நீர்

அந்தக் கிராமத்தில் உள்ள கிணற்றின் தண்ணீர் சுவையாக இருப்பதால், அப்பகுதி மக்கள் அதையே குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக அந்த கிணற்று நீரை குடித்தவர்களில் அடுத்தடுத்து 80 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் 21 பேர் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கிணற்று நீர் மாசடைந்திருந்தது தெரியவந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ முகாமையும் அமைத்துள்ளனர். மேலும், கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.