தேசிய செய்திகள்

ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வங்கி பரிவர்த்தனைக்கு 85 % வருமான வரியா? மத்திய அரசு விளக்கம்

ரூ.10 லட்சத்தை தாண்டி மேற்கொள்ளப்படும் வங்கி பரிவர்த்தனைக்கு 85 சதவீதம் அளவுக்கு வருமான வரி விதிக்கப்படுவதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக, புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருவதால் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் 85 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று ஒரு தகவல் அதிகமாக பரவியது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் (பிஐபி பேக்ட் செக்) விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக கூறியிருப்பதாவது; - சமூக வலைத்தளங்களில் பரவுவது பொய்யான தகவல். வருமான வரி என்பது வருமானத்தின் மீது மட்டுமே விதிக்கப்படுகிறது. வங்கியில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையின் மீது விதிக்கப்படுவது கிடையாது.

ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பரிவர்த்தனைகளுக்கு எந்த வகையிலும் வரி விதிக்க வருமான வரிச் சட்டத்தில் இடம் இல்லை. இதுபோன்று பரப்பப்படும் போலியான தகவல்கள் மீது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசு சார்பில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பவேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT