புதுடெல்லி
இந்திய ரெயில்வேயில் கடந்த 12 ஆண்டுகளில் பெரிய ரெயில் விபத்துகள் 88 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டன.
நாட்டில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளில் இந்திய ரெயில்வே முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், இந்திய ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில், கடந்த 12 ஆண்டுகளில் பெரிய ரெயில் விபத்துகள் 88 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டன என தெரிவித்து உள்ளது.
2014-15 ஆண்டில் 135 ஆக இருந்த விபத்து எண்ணிக்கை, 2025-26 ஆண்டில் 16 என்ற அளவில் குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஜூன் வரை 2 பெரிய ரெயில் விபத்துகளே நடந்துள்ளன என அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்திய ரெயில்வேயின், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கான செலவுகளும் சமீப ஆண்டுகளாக உயர்ந்திருக்கின்றன.
இதன்படி, 2013-14 ஆண்டில் ரூ.39,200 கோடியாக இருந்த பட்ஜெட் தொகையானது, 2025-26 ஆண்டில் ரூ.1,17,693 கோடியாகவும், 2026-27 ஆண்டில் ரூ.1,20,389 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.
இதேபோன்று, அதிக மக்கள் அடர்த்தி கொண்ட டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா வழிகளில், ஜூலை 20-ந்தேதி வரை 2,569 கி.மீ. தொலைவுக்கு ரெயில் பாதுகாப்புக்கான கவச திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.