மலப்புரம்,
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேஜஸ் என்ற மாணவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே தேஜசின் பெற்றோர் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டனர்.
அப்போது ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், தேர்வு எழுதினால் தான் தேஜசுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தேஜஸ் தற்கொலை செய்துகொண்டான். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கூறும்போது, பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டும் வழங்காமல் ஆசிரியர்கள் துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த தேஜஸ் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து மாணவரின் பெற்றோர் பெருந்தல்மன்னா போலீசில் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேஜஸ் தற்கொலைக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்காதது காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.