போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு 10ம் வகுப்பு மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவி கழிவறைக்கு சென்றார்.
நீண்ட நேரமாகியும் மாணவி கழிவறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, தோழிகள் மற்றும் பெண் கண்காணிப்பாளர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போதுதான் கழிவறையிலேயே மாணவி ஆண் குழந்தை பெற்றெடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து, மாணவியையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி 34 வாரங்கள் (எட்டு மாதங்கள்) கர்ப்பமாக இருந்ததும், குழந்தை முன்கூட்டியே பிறந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் மாணவியிடம் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
அதாவது, நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது மாணவிக்கு ஒரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அந்த மாணவன், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.