தேசிய செய்திகள்

பாம்பை கையில் பிடித்து விளையாடிய தொழிலதிபர் உயிரிழப்பு

உயிரிழந்த தொழிலதிபர் நவாப் மைதீன் ஹுசைனிக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

நகரி,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திர நகர் காத்ரி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த வர் நவாப் மைதீன் ஹுசைனி (வயது 30). தொழிலதிபர். இவர் மொயினாபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் பண்ணை வீட்டுக்குள் புகுந்த சிறிய பாம்பை அவர் கையில் பிடித்து நண்பர்களை விளையாட்டாக பயமுறுத்தினார்.

அலட்சியம்

அப்போது பாம்பு அவரது வலது கை கட்டைவிரலை கடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக மருத்துவமனை செல்லுமாறு கூறியபோதும் தனக்கு ஒன்றும் ஆகாது என அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு மணி நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பின்னர் நிலைமை கவலைக்கிடமாக மாறியதால் உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலதிபர் நவாப் மைதீன் ஹுசைனிக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.