தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் குறித்து நாளை ஆலோசனை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் குறித்து நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கமிஷனர் அருண் கோயல் கடந்த 9-ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார். மற்றொரு கமிஷனர் அனுப் சந்திர பாண்டேயும் கடந்த மாதம் ஓய்வு பெற்றிருந்தார். இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் மட்டுமே தேர்தல் கமிஷனில் பணியில் உள்ளார். 2 தேர்தல் கமிஷனர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த வேண்டியதால் இந்த 2 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வருகிற 15-ந் தேதி மாலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டத்தை ஒருநாள் முன்னதாகவே, அதாவது 14-ந் தேதி (வியாழக்கிமை) நண்பகல் 12 மணிக்கு நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த கமிட்டி உறுப்பினர்களுக்கு இதற்கான நோட்டீஸ் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது. 2 புதிய தேர்தல் கமிஷனர்களை இந்த குழுவினர் முடிவு செய்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் அன்றைய தினமே இந்த நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT