தேசிய செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும் - மத்திய அமைச்சர் தகவல்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பயன்படும் வகையில் புதிய செயலி உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது;-

வரும் 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 16 இந்திய மொழிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ள பணிகளுக்காக 8,754 கோடி ரூபாய் ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு செலவின நிதிக்குழு பரிந்துரை அளித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக தனி மொபைல் செயலி உருவாக்கப்படும். இதை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் தங்கள் விவரங்களை சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.