நீலகிரி கருங்குரங்கு குட்டியுடன் உள்ளது.  
தேசிய செய்திகள்

12 ஆண்டுகள் கழித்து அரிய வகை நீலகிரி கருங்குரங்கு இனத்தில் புதிய வரவு!

கடந்த 2014-ஆம் ஆண்டு இவற்றுக்கு 'சோனா' என்ற பெண் குட்டி பிறந்ததற்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இந்த புதிய வரவு நிகழ்ந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு இனத்தில் புதிய வரவு வந்துள்ளது.

புதிய வரவு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரபலமான உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு (லங்கூர்கள்) இனம் புதிய குட்டியை ஈன்றுள்ளது. பூங்காவில் உள்ள ராஜீவ் (வயது 18) மற்றும் ரஞ்சினி (வயது 15) என்ற கருங்குரங்கு ஜோடிக்கு கடந்த ஜூலை 14, 2026 அன்று இந்த புதிய குட்டி பிறந்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு இவற்றுக்கு 'சோனா' என்ற பெண் குட்டி பிறந்ததற்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இந்த புதிய வரவு நிகழ்ந்துள்ளது. இதனால் பூங்காவில் உள்ள நீலகிரி கருங்குரங்குகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை தாயகமாகக் கொண்டவை நீலகிரி கருங்குரங்குகள். இந்த குரங்குகள் கூச்ச சுபாவம் கொண்டவை என்பதால் எளிதில் இனப்பெருக்கம் செய்யாது. தற்போது பிறந்துள்ள குட்டியும் தாயும் நலமாக இருப்பதாகவும், மருத்துவக் குழுவினர் அவற்றை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வனவிலங்கு ஆர்வலர்களால் இந்த நிகழ்வு பெரிதும் வரவேற்கப்படுகிறது.

SCROLL FOR NEXT