ஸ்ரீநகர்,
"முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்ற பொன்மொழிக்கு இலக்கணமாக, ஜம்முவைச் சேர்ந்த 45 வயது பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த இமாலய சாதனையின் பின்னணியில் அவரது மகனின் பாசப் போராட்டமும், ஆசிரியப் பணியும் ஒளிந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவின் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹான்ஸ் (வயது 45). பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற இவர், கடந்த 2002-ம் ஆண்டு தனது 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதினார். ஆனால், எதிர்பாராதவிதமாக கணித பாடத்தில் தோல்வியடைந்தார். அதன் பிறகு திருமணம், குடும்பம், குழந்தைகள் என அவரது கல்விப் பயணம் அப்படியே முடங்கிப்போனது. எனினும், எப்படியாவது பத்தாம் வகுப்பைத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக இருந்து வந்தது.
ரேணு ஹான்ஸின் இந்த நீண்ட கால கனவை நனவாக்க அவரது 12-ஆம் வகுப்பு படிக்கும் மகன் நமன் கோல் முன்வந்தார். சைகை மொழியை நன்கு அறிந்த நமன், தனது தாய்க்கு ஒரு சிறந்த ஆசிரியராக மாறினார். மாலையில் பள்ளி முடிந்து வந்ததும், நமன் தனது தாய்க்கு பாடங்களை சைகை மொழி மூலம் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தார். கேட்கும் திறனற்ற ஒருவருக்கு கடினமான அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளைப் புரிய வைப்பது சவாலாக இருந்தபோதிலும், இருவரும் விடாமுயற்சியுடன் உழைத்தனர்.
ஜம்மு-காஷ்மீர் திறந்தநிலைப் பள்ளி மூலம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இருமுறைத் தேர்வை ரேணு ஹான்ஸ் எழுதினார். கடந்த 10-ந்தேதி அன்று வெளியான தேர்வு முடிவுகளில், அவர் 500-க்கு 410 மதிப்பெண்கள் (82%) பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.
இந்த வரலாற்று வெற்றி குறித்து அவரது மகன் நமன் கோல் கூறுகையில், "எனது தாயின் இந்த சாதனை எனக்கு பெருமிதம் அளிக்கிறது. அவர் அடுத்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்புகிறார். அதற்கும் நான் அவருக்கு முழுமையாக கற்றுக் கொடுப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முறையான வழிகாட்டுதலும், தளராத நம்பிக்கையும் இருந்தால் மாற்றுத்திறனாளிகளாலும் எத்தகைய சாதனையையும் படைக்க முடியும் என்பதை ரேணு ஹான்ஸ் உலகிற்கு நிரூபித்துள்ளார்.