புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் இருந்து உலக நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் இன்றுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும், உடனடியாக முடிவுகள் தெரிவதற்கு போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்தது. முதற்கட்டத்தில் தயாராக இருந்த உபகரணங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டன என கூறப்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு உபகரணங்கள் வர காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஆன்டிபாடி பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா பரிசோதனைக்கு தேவையான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள், சீனாவின் குவாங்சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.