மும்பை,
மும்பையில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளததால் வீட்டுக் கதவை படுக்கையாக்கி கர்ப்பிணிக்கு உதவிய கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவம் பார்ப்போரை மகிழ்ச்சியடையச் செய்தது.
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து 4 -வது நாளாக அங்கு விடிய விடிய இடைவிடாத மழை பெய்தது.
இந்த நிலையில் இந்த மாவட்டத்தில் சூழப்பட்ட ஹனுமன்பாடா கிராமத்தை சேர்ந்த பிரியங்கா ரவி யாதவ் என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கனமழையால் கிராமத்தில் வீட்டை சுற்றியுள்ள சாலைகள் நீரில் மூழ்கியதால் ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் நிலவியது.
இதனால் யாதவின் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். எனவே உள்ளூர் சமூக ஆர்வலர், சுகாதார பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு விரைந்து சென்று, வீட்டின் மரக்கதவு ஒன்றை தற்காலிக ஸ்ட்ரெச்சராக மாற்றினார்.
பின்னர் அதன் மீது பிரியங்கா யாதவை படுக்க வைத்து, அதை தங்கள் தோள்களில் சுமந்தபடி வெள்ள நீரில் இறங்கினர். மார்பளவு உயரத்துக்கு இருந்த வெள்ள நீரில் உயிரை பணயம் வைத்து நடந்து சென்று அந்தப்பெண்ணை சரியான நேரத்தில் அருகில் உள்ள சபாலே கிராமப்புற ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கண்காணிப்பில் அந்தப்பெண் ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். சுக பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.