காட்டுப்பன்றி 
தேசிய செய்திகள்

கோழிக்கோடு அருகே வராண்டாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த முதியவரைத் தாக்கிய காட்டுப்பன்றி

தாக்கிய வேகத்திலேயே அந்தப் பன்றி அங்கிருந்து தப்பியோடியது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே, வீட்டின் வராண்டாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த முதியவரை காட்டுப்பன்றி ஒன்று அதிவேகமாக வந்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை தாக்கிய காட்டுப்பன்றி

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (வயது 59). இவர் இன்று (புதன்கிழமை) காலை தனது வீட்டின் வராண்டாவில் அமர்ந்து அமைதியாக செய்தி நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் முன் வாசல் கேட் வழியாக எதிர்பாராத விதமாக அதிவேகமாக பாய்ந்து வந்த காட்டுப்பன்றி ஒன்று, அப்துல் காதரை ஆக்ரோஷமாக முட்டித் தள்ளியது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

தாக்கிய வேகத்திலேயே அந்தப் பன்றி அங்கிருந்து தப்பியோடியது. இந்த திடீர் தாக்குதலில் நிலைதடுமாறி விழுந்த அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரால் அவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தாமரச்சேரி தாலுகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரலாகும் சிசிடிவி காட்சி

அவர் அமர்ந்திருந்த நாற்காலியை உடைத்துக் கொண்டு காட்டுப்பன்றி தாக்கும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அண்மைக்காலமாக குடியிருப்புப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் மற்றும் மனிதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT