தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி என்னுடைய முன்னாள் காதலி: பா.ஜ.க. எம்.பி. ராகவ் சத்தா பேட்டி

போதைப்பொருட்கள் கொடுமை முடிவுக்கு வந்து விட்டது என பஞ்சாப் அரசு பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறது என குற்றச்சாட்டாக கூறினார்.

சண்டிகார்

ஆம் ஆத்மி கட்சி என்னுடைய முன்னாள் காதலி போன்றது என பா.ஜ.க. எம்.பி. ராகவ் சத்தா பேட்டியில் கூறினார்.

பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அக்கட்சியில் இருந்து செயல்பட்டு, பின்னர் விலகி பா.ஜ.க.வில் இணைந்த எம்.பி. ராகவ் சத்தா பஞ்சாப்பின் சண்டிகார் நகரில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

போதைப்பொருட்கள் விற்பனை

அப்போது அவர் அளித்த பேட்டியின்போது, பஞ்சாப்பில் போதைப்பொருள் தொடர்பான சூழல் எப்படி உள்ளது? என்றால், ரேசன் கடைகளில் மக்கள் வரிசையில் நிற்பது போன்று உள்ளது. மாநிலம் முழுவதும் வீடு தேடிச்சென்று போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன.

ஆனால், போதைப்பொருட்கள் கொடுமை முடிவுக்கு வந்து விட்டது என பஞ்சாப் அரசு பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறது என குற்றச்சாட்டாக கூறினார். தொடர்ந்து அவர், ஆம் ஆத்மியின் தற்போதைய நிலைமை என்னவென்றால், அவர்களுடைய கனவில் நான் ஒரு பேயாக தோன்றுகிறேன்.

முன்னாள் காதலி

ஆனால், எனக்கு ஆம் ஆத்மி முன்னாள் காதலி போன்று தெரிகிறது. அதன் காதலர் அவளை கைவிட்டு விட்டு, தன்னுடைய வாழ்க்கையை பார்த்து கொண்டு சென்று விடுகிறான். ஆனால், அவள் தொடர்ந்து என் மீது காதலுடன் இருக்கிறாள்.

இதற்காக நான் வேதனையடைகிறேன். ஒரு மனமுடைந்த காதலியாக, ஒரு நாள் அவள் தன்னை காயப்படுத்தி கொள்வாளோ என்ற கவலை உள்ளது. அதற்காக நான் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT