டெல்லி,
டெல்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
2026ம் ஆண்டுக்கான டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. மாணவர் சங்க தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டன.
தலைவர் பதவியை ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபி (ABVP) மீண்டும் தக்க வைத்துக் கொண்டு உள்ளது. அதன் வேட்பாளரான யாஷ் டபாஸ் தலைவர் பதவியைக் கைப்பற்றி உள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட தீபான்சு வெற்றி பெற்றுள்ளார்.
தலைவர் பதவியை போன்று, செயலாளர் பதவியையும் ஏபிவிபி வென்றுள்ளது. அதன் வேட்பாளர் ரியா சாவ்தி வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் தேர்தலில் ஏபிவிபியின் வேட்பாளர் லக்ஷயா ராஜ் சிங் வென்று உள்ளார். மாணவர் சங்க தேர்தலில் தமது முழு ஆளுமையை செலுத்தி ஏபிவிபி வென்றுள்ளதை அந்த அமைப்பினரும், ஆதரவாளர்களும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடி வருகின்றனர்.