கோலார் தங்கவயல்:
வாகன திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து 38 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் தற்போது போலீசில் சிக்கினார். அவரிடமிருந்து ரூ.51 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையை சேர்ந்தவர் பாஷாஜான். இவர் கடந்த 1985-ம் ஆண்டு வாகன திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் 6 மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கோலார் தங்கவயல் கோர்ட்டு ஆண்ட்சன்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டது.
வலைவீச்சு
அதன்படி ஆண்டர்சன்பேட்டை போலீசார் பாஷாஜானை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத், போலீஸ்காரர்கள் ராஜேந்திரா, ராஜீவ், முஜாமில் உள்ளிட்ட பலர் பாஷாஜானை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாஷாஜான் மறைந்திருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் ஆண்டர்சன்பேட்டையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
உடனே அங்கு சென்ற போலீசார் பாஷாஜானை கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான பின்பு பல்வேறு இடங்களில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அவரிடமிருந்து ரூ.51.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.