தேசிய செய்திகள்

நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் ; இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் திரண்டனர்!

புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெங்களூரு

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் (வயது 46). இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் கெலாட், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னடம் உள்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் 5 கி.மீ தூரம் வரை காத்திருந்து வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர்.

இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த அவ்வப்போது போலீசார் தடியடி நடத்தினர்.

இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட கியூ வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து மற்றொரு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். அவரை போலீசார் பாதுகாப்புடன் கன்டீரவா மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் வந்து, புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட மந்திரிகள் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத்திய அரசு சார்பில் மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா, சட்டசபை சபாநாயகர் காகேரி, சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமி, ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., ஸ்ரீகாந்த், அலி, தமிழ் நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், பிரபுதேவா, நடிகைகள் ரம்யா, சுமலதா எம்.பி., ராதிகா குமாரசாமி, பவித்ரா லோகேஷ், ரஷிதா ராம், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பல்வேறு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா மைதானத்திற்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அது முதல் நேற்று நள்ளிரவு வரை ரசிகர்கள் அலை அலையாக வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 25 மணி நேரத்தில் புனித் ராஜ்குமார் உடலுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர் .கொட்டும் மழை, கடுமையான பனி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் கண்ணீர் மல்க இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதை செலுத்தபட்டது.

இதன்பின்னர் 2 நிமிடங்கள் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து புனித் ராஜ்குமார் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனித் ராஜ்குமார் இறுதி நிகழ்ச்சியில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் பங்கேற்றனர். இதனையடுத்து புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை