தேசிய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது 25-ந் தேதி வழங்கப்படுகிறது

நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வருகிற 25-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் தேர்வு

இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறவுள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.

நடிகர் தனுசுக்கு தேசிய விருது

இதைப்போல அன்றைய தேதியில் 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இதில் சிறந்த படத்துக்கான தேசிய விருது, மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கம் என்ற படத்துக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்படுகிறது. அசுரன் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதைப்போல போன்ஸ்லே என்கிற இந்தி படத்தில் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய், மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி மற்றும் பங்கா ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரும் தேசிய விருது பெறுகிறார்கள்.

விஜய் சேதுபதி

இதைப்போல சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெறுகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மேலும் கண்ணான கண்ணே… பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், கேடி (எ) கருப்பு துரை என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெறுகிறார்கள்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்