தேசிய செய்திகள்

மோடிக்கு எதிராக பேச அச்சப்படுகிறார்: ராகவ் சத்தா பதவியை பறித்த ஆம் ஆத்மி

ஆம் ஆத்மியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டு உள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த 2024ஆம் ஆண்டில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அப்போது ஆம் ஆத்மி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மதுபான ஒதுக்கீட்டு வழக்கில் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டார். அப்போதும் ராகவ் சத்தா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியின் வெற்றி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், ஆம் ஆத்மியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய துணைத் தலைவராக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கப்பட்டதையடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகவ் சத்தா, அமைதியாக இருப்பதால் தோற்றுவிட்டதாக நினைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.

ராகவ் சத்தாவின் இந்த பதிவுக்கு ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் தாண்டா கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாகவே நீங்கள் மோடிக்கு எதிராக பேச அச்சப்படுகிறீர்கள். நாட்டின் உண்மையான பிரச்சினைகளை எழுப்ப அஞ்சுகிறீர்கள்” என்று கூறினார்.