புதுடெல்லி,
பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களாக முதலிடத்தில் இருந்த ஆசியாவை பின்னுக்குத் தள்ளி, தற்போது ஆப்பிரிக்கா இந்த மோசமான நிலையை எட்டியுள்ளது.
ஆப்பிரிக்காவில் தற்போது சுமார் 30.9 கோடி மக்கள் தீவிர பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான், காங்கோ போன்ற நாடுகளில் நிலவும் உள்நாட்டு மோதல்கள், கடுமையான வறட்சி, பொருளாதார நெருக்கடி மற்றும் ஆரோக்கியமான உணவுக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் 56.6% மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். அங்குள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்களால் சத்தான உணவை விலைக்கு வாங்க முடிவதில்லை. எனவே, உலகளாவிய அமைப்புகள் அங்கு அவசர உதவிகளை வழங்கி வருகின்றன.