லக்னோ,
ஆக்ராவில் மனைவிக்காக தனது தாய்க்கு விஷம் கொடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.
உத்ரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவின் தஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரா. இவரின் மனைவி, குடும்பத் தகராறு காரணமாகத் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர ரவீந்திரா மாமியாரின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, அவரது மாமியார் பூல்வதி ஒரு அதிர்ச்சிகரமான நிபந்தனையை விதித்தார். அதாவது ரவீந்திராவின் தாயான ராம்மூர்த்தியைக் கொன்றால் மட்டுமே தனது மகளை அவருடன் அனுப்பி வைப்பதாகக் கூறினார். அத்துடன் கொலை செய்வதற்காக விஷத்தையும் மாமியாரே கொடுத்து அனுப்பினார்.
மனைவி மீது கொண்ட மோகத்தால், மாமியார் கொடுத்த விஷத்தை ரவீந்திரா வாங்கிக் கொண்டார். மேலும் அதனைத் தனது தாய் சாப்பிடும் உணவில் கலந்து கொடுத்துள்ளார்.
உணவைச் சாப்பிட்ட தாய் ராம்மூர்த்தி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் அவரது கணவரால் மீட்கப்பட்டார். பின்னர் உடனடியாக ஆக்ராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகனின் மீது சந்தேகமடைந்த ராம்மூர்த்தியின் கணவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தஜ்கஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாய் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட மகன் ரவீந்திராவைக் கைது செய்தனர். மேலும், இக்குற்றத்திற்கு தூண்டுகோலாக இருந்த தலைமறைவான மாமியார் பூல்வதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குடும்பத்தில் நிலவி வந்த சொத்துத் தகராறும் இந்த கொடூர சம்பவத்திற்கு மற்றொரு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.