தேசிய செய்திகள்

ஆமதாபாத் விமான விபத்து; இழப்பீடு வழங்கும் பணி தொடக்கம் - ஏர் இந்தியா தகவல்

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேர், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் என மொத்தம் 260 பேர் பலியானார்கள். விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில் ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதன்படி ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.