தேசிய செய்திகள்

ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்

அடுத்தடுத்த நாள்களில் விமான சேவை மேலும் அதிகரிக்கப்படும் என ஏர் இந்தியா கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஏர் இந்தியா நிறுவனம் ஓமன், குவைத் நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரைத் தொடர்ந்து மேற்கு ஆசிய நாடுகளுக்குத் தனது விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியிருந்தது. தற்போது போர் பதற்றம் முடிவடைந்துள்ள நிலையில் ஓமன் மற்றும் குவைத்துக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம்

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், 18 இந்திய நகரங்களிலிருந்து வாரந்தோறும் 780 விமானங்களை மேற்கு ஆசிய நாடுகளுக்கு இயக்கி வருகிறது. தற்போது ஓமன் மற்றும் குவைத் நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டதன் மூலம் மேற்கு ஆசிய நாடுகளுடனான போக்குவரத்து இணைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஏர் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

விமான சேவை தொடக்கம்

இதன்மூலம், கோழிக்கோடு சலாலா வழித்தடத்தில் ஜூலை 2 முதலும், கோழிக்கோடு மற்றும் குவைத் இடையே ஜூலை 3 முதலும் விமான சேவைகள் மீண்டும் தொடங்கவுள்ளது. அதேபோல, பெங்களூரு - குவைத் இடையேயான சேவைகள் ஜூலை 4 முதல் தொடங்கவுள்ளன. அடுத்தடுத்த நாள்களில் விமான சேவை மேலும் அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட விமானங்களின் மூலம் 43 உள்நாட்டு மற்றும் 16 சர்வதேச நகரங்களை இணைக்கிறது.