ஆமதாபாத்
குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு அபுதாபியில் இருந்து ஏர் அரேபியா விமானம் (எண் 3எல் 111) ஒன்று வந்து சேர்ந்தது. அதில், ஷாருக் என்ற ஆண் பயணி இறங்கியுள்ளார். நோயாளியாக வந்திறங்கிய அவரை சந்தேகத்தின்பேரில் மறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், உலோக பொருட்களை விழுங்கி இருக்கிறேன் என விசாரணையின்போது அதிகாரிகளிடம் உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார். தொடர்ந்து, நகர தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டின் முன் ஆஜர்படுத்தி அவருடைய உத்தரவின்படி, அந்த விமான பயணியை பாதுகாப்பாக கொண்டு போய் ஆமதாபாத் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் சேர்த்து விசாரணை நடத்தினர்.
அதில், மஞ்சள் வடிவில் 3 சிலிண்டர் வடிவ கேப்சூல்களும், ஸ்டீல் நிறத்தில் உருண்டை வடிவ பந்து போன்ற பொருளும் ஷாருக்கின் வயிற்றில் இருந்தது. இதனை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
இதன்பின்னர், அவருடைய மலக்கழிவில் இருந்து 3 உருளை வடிவ கேப்சூல்களில் 135.2 கிராம் எடை கொண்ட 999.0 தூய 24 கேரட் தங்கம் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.21.89 லட்சம் ஆகும். 4-வது கேப்சூலில் விலை மதிப்பில்லாத உலோகம் இருந்துள்ளது.
இதனால், அந்த விமான பயணி அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு உடலில் தங்கம் மறைத்து வைத்து, கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.