இடுக்கி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகன், பெற்றோரை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டம் அருகே உள்ள ஏழுக்கம் வயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி வல்சம்மா (50). இவர்களுக்கு ஜோதிஷ் (43) என்ற மகன் உள்ளார். மகன் ஜோதிஷ் தனது தந்தை சந்திரனுடன் சேர்ந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார்.
இவருக்கு தீவிர மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் ஜோதிஷ் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தந்தை சந்திரனிடம் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க சந்திரன் மறுத்ததால், 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஜோதிஷ், வீட்டில் இருந்த கம்பியை எடுத்து தாய், தந்தை என்றும் பாராமல் 2 பேரையும் கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுங்கண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெற்றோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து,பெற்றோரை அடித்து கொன்ற மகன் ஜோதிஷை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.