தேசிய செய்திகள்

விண்வெளி சார் இளம் தொழில் முனைவோருக்கு அனைத்து உதவியும் வழங்கப்படும் - பிரதமர் மோடி உறுதி

விண்வெளித்துறையைப் பற்றி சிந்திக்கும்போது உலகம் இந்தியாவை நோக்கும் ஒரு சூழலமைப்பு உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

இளம் விண்வெளி தொழில் முனைவோருக்கு அனைத்து உதவியும் அரசு வழங்கும் என உறுதியளித்த பிரதமர் மோடி, மக்களின் அன்றாட தேவைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துமாறும் அவர்களை கேட்டுக்கொண்டார்.

20 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

விண்வெளி தொடர்பான 20 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், நிறுவனர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, ஒரு புதிய துறையில் துணிச்சலுடன் நுழைந்து கணிசமான பங்களிப்பை ஆற்றி வரும் அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இந்தியா சாதனை

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

புதிய மற்றும் சவாலான ஒரு களத்தில் நுழைந்து, அபாரமான தைரியத்தை வெளிப்படுத்திய இளம் தொழில்முனைவோர் மற்றும் புதுமைப் படைப்பாளர்களான, இந்திய விண்வெளித்துறையினரை சந்தித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

அவர்கள் இடர்களை ஏற்று, சீர்திருத்த செயல்முறையின் மீது நம்பிக்கை வைத்து, தங்கள் முயற்சிகளில் சீராக செயல்பட்டனர். இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் விண்வெளித்துறையில் இந்தியா பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது.

உலகம் இந்தியாவை நோக்கும்

இந்தியாவின் தனியார் விண்வெளி சூழலமைப்பு, நாட்டுக்கும் உலகுக்கும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியும். விண்வெளித்துறையைப் பற்றி சிந்திக்கும்போது உலகம் இந்தியாவை நோக்கும் ஒரு சூழலமைப்பு உருவாக வேண்டும்.

உலகளாவிய திறமையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை நாட்டுக்கு ஈர்க்கும் ஒரு காந்தமாக இந்தியாவின் விண்வெளித்துறை செயல்பட முடியும். உலக அளவில் இந்தியாவின் நிலையை விரைவாக வலுப்படுத்த வேண்டும்.

அன்றாட வாழ்க்கை

விண்வெளி ஸ்டார்ட்அப்-களுடன் அரசு தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என நான் உறுதியளிக்கிறேன். ஏனெனில் அவர்கள் இந்தியாவின் எதிர்கால திறன்களை உருவாக்குகிறார்கள்.

விண்வெளித்துறையில் வலுவான, புதுமையான மற்றும் வணிக ரீதியாக சாத்தியமான ஒரு முன்மாதிரியை இந்தியா உலகிற்கு வழங்க முடியும். அதேநேரம் விவசாயம், கால்நடை மேலாண்மை, பால்வளம், சுற்றுச்சூழல் மற்றும் அன்றாட வாழ்க்கையை சார்ந்த பல பிற துறைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும்? என்பதை ஆய்வு செய்ய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த தலைமுறையினர்

விண்வெளி குப்பைகள் துறையில் பணியாற்றும் நிறுவனங்கள், தங்களின் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம்.

விவசாயத்துறையுடன் இணைந்து பணியாற்றும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள், விவசாயிகள் நன்கு அறிந்த முடிவுகளை எடுக்கவும், அவர்களின் விளைச்சலை அதிகரிக்கவும் உதவுவதற்காக, விவசாயப் பல்கலைக்கழகங்கள் மற்றும் துறைகளுடன் ஒத்துழைக்கலாம்.

மேலும் அடல் டிங்கரிங் ஆய்வகங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், பள்ளி மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டி, அடுத்த தலைமுறையினரை விண்வெளித்துறையில் பங்கேற்க ஊக்குவிக்க முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.