புதுடெல்லி,
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதனிடையே நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதஞ்சலி நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இனி தவறான விளம்பரங்களை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி நிறுவனம் இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை மீறி தவறான விளம்பரங்களை வெளியிட்டது ஏன்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.