ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.
இந்த குகைக்கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரையாக சென்று அமர்நாத் குகைக்கோவிலில் குவிவார்கள்.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 28ம் தேதி வரை 57 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது.
அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியுள்ள நிலையில் பால்தல், பஹல்காம் முகாம்களில் இருந்து முதல் குழுவாக 10 ஆயிரம் பேர் அமர்நாத் குகைக்கோவில் செல்லும் பயணத்தை தொடங்கியுள்ளனர்.