புதுடெல்லி
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த சூழலில், வளைகுடா நாடுகளில் சிக்கி தவித்து வரும் எண்ணற்ற இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் இணை செயலாளர் அசீம் மகாஜன் இன்று கூறும்போது, இந்தியர்களை பாதுகாப்பது மற்றும் சொந்த நாட்டுக்கு அழைத்து வருவது என்று நடந்து வரும் முயற்சிகளை விரிவாக விளக்கினார்.
அப்போது அவர், கடந்த பிப்ரவரி 28-ந்தேதி முதல் ஏறக்குறைய 9.84 லட்சம் இந்திய பயணிகள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய நடவடிக்கைகளில் இது ஒன்று. எங்களுடைய முயற்சிகளின்படி, மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறோம்.
உள்ளூர் அரசின் வழிகாட்டுதல்கள், விமான சேவை நிலை மற்றும் பயண சூழல்கள் ஆகியவை தொடர்பான தகவல்களை வைத்து, மேம்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வழங்கினோம். வளைகுடா மற்றும் மேற்காசியா முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள், அவசரகால நடவடிக்கையாக, நெருக்கடியை கையாளும் வகையில் 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார்.