தேசிய செய்திகள்

ஜார்கண்ட்: அமித்ஷா தலைமையில் 4 மாநில மண்டல கவுன்சில் கூட்டம்; பலத்த பாதுகாப்பு

அமித்ஷா வருகையை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நகர எல்லைக்குள் சரக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராஞ்சி,

ஜார்கண்டின் ராஞ்சி நகரில் 27-வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், ஜார்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 4 கிழக்கு மாநிலங்களை சேர்ந்த 70 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பது, ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக ராஞ்சி நகருக்கு நேற்று இரவு 10 மணியளவில் அமித்ஷா வந்துள்ளார். அவருடைய வருகையை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நகர எல்லைக்குள் சரக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT