புதுடெல்லி,
அரியானா, மராட்டியம், ஜார்கண்ட் மற்றும் டெல்லி மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டெல்லியை தவிர மற்ற 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ளது. டெல்லியில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள பா.ஜ.க. அதனைத்தொடர்ந்து நடைபெறும் இந்த 4 மாநில சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற முயற்சித்து வருகிறது.
இதனையடுத்து டெல்லியில் நேற்று பா.ஜ.க. தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா தலைமையில் 4 மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் புபேந்தர் யாதவ் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைப்பது குறித்தும், பா.ஜ.க.வில் இணைய விரும்பும் எதிர்க்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.