கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷா இன்று மேற்கு வங்காளம் பயணம்

மேற்கு வங்காளத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று முதல் 19-ந்ததி வரை 3 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம் செல்கிறார். இந்த பயணத்தின்போது எல்லைப் பாதுகாப்பு,சட்டம் - ஒழுங்கு, மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக மத்திய உள்துறை மந்திரி மேற்கு வங்காளத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

நாளை (18-ந்தேதி) சிலிகுரியில் உள்ள ஜுமாகாச் எல்லைச் சாவடிக்குச் சென்று, அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார். பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படையின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் எல்லை தொடர்பான பிரச்சினைகள் குறித்து நடைபெறும் கூட்டத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். நாளை மாலை நடைபெறும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு தொடர்பான விஷயங்கள் குறித்த கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார்.

இதையடுத்து நாளை மறுநாள் (19-ந்தேதி) சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை ஆய்வு செய்யும் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்காக கொல்கத்தா செல்கிறார். அதைத் தொடர்ந்து அலிபோரில் உள்ள தேசிய நூலகத்தில் 'சொற்களின் அருங்காட்சியகத்தின்' முதல் கட்டத்தை திறந்து வைக்கிறார். மேலும் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வா பங்களா மாநாட்டு மையத்தில் அமுல் டெய்ரியின் தயிர் பதப்படுத்தும் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.