தேசிய செய்திகள்

'ஆங்கிலேயருக்கே கடன் கொடுத்த பரம்பரை நாங்க' - 109 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியும் முதலுமாக திருப்பி கேட்க வாரிசுகள் முடிவு!

சர்வதேச சட்டப்படி இறையாண்மை கொண்ட ஒரு நாடு, தான் வாங்கிய கடனை கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும்.

போபால்,

இந்தியாவை சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்கள், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந்தேதி இரவு நாட்டைவிட்டு வெளியேறினர். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15-ந்தேதி இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆங்கிலேய அரசு இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், முதலாம் உலகப்போரின்போது ஏற்பட்ட நிதி நெருக்கடி சமயத்தில், 1917-ம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலம் சீஹோர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜும்மாலால் ருதியா என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளது.

ஆவணம் கிடைத்தது

ஆங்கிலேய அரசுக்கு கடன் கொடுத்த தகவல் ருதியாவின் மகன் உள்ளிட்டோருக்கு அப்போது தெரிந்திருந்தும், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் சுதந்திரத்திற்கு பிறகு அந்த பணத்தை திருப்பி பெறுவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இந்த நிலையில், 109 ஆண்டுகளுக்கு பிறகு ஜும்மாலால் ருதியாவின் பேரன் விவேக், வீட்டில் இருந்த பழைய உயில்கள், ஆவணங்களை ஆய்வு செய்திருக்கிறார். அப்போது அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், தனது தாத்தா, ஆங்கிலேய அரசுக்கு ரூ.35 ஆயிரம் கடன் வழங்கியது தொடர்பான அசல் பத்திரம் மற்றும் ஆவணம் கிடைத்துள்ளது.

முதல் உலகப்போர் நிதி நெருக்கடி

அந்த ஆவணத்தில், முதல் உலகப்போரின்போது ஏற்பட்ட நிதி நெருக்கடியில், சீஹோர் சமஸ்தான தேவைக்காக 1917-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி ரூ.35 ஆயிரம் கடன் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய காலத்தில், போர்க்கடன் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.35 ஆயிரம் என்பது மிகப்பெரிய தொகை. இன்றைய காலத்தில் கோடிகளுக்கு சமம். தற்போது, வட்டியுடன் சேர்த்தால் இந்த தொகை ரூ.12 கோடிக்கு மேல் வரும் என்று கூறப்படுகிறது.

Also read:பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர் - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கடனை திருப்பி கேட்க முடிவு

இந்த நிலையில், அந்த பணத்தை ஆங்கிலேய அரசு இதுவரை திருப்பி தராததால், கடனை திருப்பிக் கேட்க விவேக் மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, தற்போதைய பிரிட்டன் அரசுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இறையாண்மை கொண்ட ஒரு நாடு, தான் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த வேண்டியது சர்வதேச சட்டப்படி கட்டாயம் என்பதால், இந்த பணம் திரும்பக் கிடைக்கும் என்று விவேக் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.