தேசிய செய்திகள்

வாழை இலையில் அறுசுவை உணவுடன் குரங்குகளுக்கு வழங்கப்பட்ட ஓணம் விருந்து

உத்திராடம் மற்றும் திருவோணம் நாளில் இந்த ஓணம் விருந்து பரிமாறப்படுகிறது.

திருவனந்தபுரம்,

பண்டிகை நாட்களில் அறுசுவை உணவுகளை சமைத்து குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்வார்கள். ஆனால், கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 'வானர சத்யா' என்ற பெயரில் குரங்குகளுக்கு ஓணம் விருந்து வழங்கப்பட்டது.

இந்த விருந்து கொல்லம் மாவட்டம், சாஸ்தாம் கோட்டாவில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில்தான் வழங்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குரங்குகளுக்காக சிறப்பு ஓணம் விருந்து வழங்கப்படுவது வழக்கம். ஓணம் பண்டிகையின் இரண்டு முக்கிய நாட்களான உத்திராடம் மற்றும் திருவோணம் நாளில் இந்த ஓணம் விருந்து பரிமாறப்படுகிறது.

அதன்படி உத்திராடம் நாளான நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கோவிலில் உள்ள 'வானர போஜன சாலா' என்ற பகுதியில் வாழை இலைகளில் சோறு, பருப்பு குழம்பு, அப்ப ளம், பச்சடி, அவியல், ஊறுகாய் போன்ற உணவு வகைகள் பரிமாறி வைக்கப்பட்டன.

இந்த விருந்தை சாப்பிட குரங்குகள் வழக்கம் போல் மண்டபத்திற்கு வந்தன. முதலில் ஒரு குரங்கு வந்தது. அது தனக்குரிய உணவை சாப்பிட்டு விட்டு சென்றது. அதனை தொடர்ந்து மற்றொரு குரங்கு கூட்டம் வந்து உணவை சாப்பிட்டு சென்றன. இவ்வாறு குரங்குகள் எவ்வித இடையூறும் இன்றி வரிசையாக அமர்ந்து உணவருந்தி சென்றன. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.