சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஆந்திராவில் அந்த மாநில போலீசாருடன் இணைந்து ராஜமுந்திரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு சொகுசு காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் 530 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரராவ் (வயது 47) மற்றும் கோவர்தன்(30) என்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.