அமராவதி,
ஆந்திராவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உரிய அனுமதியின்றி கல்லூரி டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்து வருவதாக ஆந்திர அரசாங்கத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி சத்யகுமார்யாதவ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தகவல்களை சேகரித்து, அனுமதியின்றி பணிக்கு வராத மருத்துவர்களின் பட்டியலைத் தயாரித்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணியாற்றிய 51 டாக்டர்கள் அனுமதி இல்லாமல் பணிக்கு வராததால் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 8 இணைப் பேராசிரியர்கள், 41 உதவி பேராசிரியர்கள், 2 தொழில் பயிற்சி பயிற்றுனர்கள் அடங்குவர். இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சத்யகுமார்யாதவ் அளித்த பேட்டியில், "விளக்கக் கடிதங்கள் வழங்கப்பட்டு பதில் அளிக்க போதிய நேரம் கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் இடமிருந்து எந்த பதிலும் வராததால் பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என அவர் கூறினார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட 8 இணைப் பேராசிரியர்களில் ஒருவரான ஆந்திரா மருத்துவ கல்லூரி டாக்டர், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை என்றும், மற்றொருவரான உதவி பேராசிரியர் 2022 ஆகஸ்டு 22-ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான டாக்டர்கள் கடப்பா, அனந்தபூர், ஒங்கோல், திருப்பதி, விஜயவாடா, காக்கிநாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டுக்கு குறைவாக பணிக்கு வராமல் இருந்த 11 டாக்டர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் 33 டாக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பணிவிடுப்பு ஒரு ஆண்டை கடந்தால், அவர்களுக்கும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.