தேசிய செய்திகள்

ஆந்திராவில் மர்மநோய் பரவல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேரில் ஆறுதல்

ஆந்திராவில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேரில் ஆறுதல் கூறினார்.

தினத்தந்தி

ஏலூர்,

ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்தது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்புக்கு ஆளாயினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 290 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார்.

மர்மநோயால் பாதிக்கப்பட்டு ஏலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

தகுந்த சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதற்கிடையில், மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 45 பேர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு குணமடைந்த சுமார் 200 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மங்களகிரியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர்கள் குழு, ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு, முழுமையான பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை சேகரித்தது. ஏற்கனவே ரத்த பரிசோதனையும், மூளை சி.டி. ஸ்கேனும் செய்யப்பட்டபோதும் மர்மநோய்க்கான காரணத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளால் அறிய முடியவில்லை.

ஆரம்பத்தில், மர்மநோய்க்கு குடிநீர் மாசு காரணமாக இருக்குமா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு மாசு ஏதும் ஏற்படவில்லை என பரிசோதனையில் தெரியவந்தது. கொசு ஒழிப்புக்காக போடப்பட்ட புகைமூட்டம், இந்த நோய்க்கு காரணமாக இருக்கக்கூடுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. கல்சர் டெஸ்ட் முடிவில்தான் மர்மநோய்க்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக நிபுணர்களுடன் பேசிய பா.ஜ.க. எம்.பி. நரசிம்மராவ் கூறுகையில், இந்த மர்மநோய்க்கு ஆர்கனோகுளோரின் என்ற நச்சுத்தன்மைப் பொருள் காரணமாக இருக்கக்கூடும் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்