தேசிய செய்திகள்

அக்டோபர் 2-ந் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

லோக்பால் உருவாக்குவதில் மத்திய அரசின் தாமதத்தை கண்டித்து அக்டோபர் 2-ந் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். #AnnaHazare

தினத்தந்தி

ராலேகான் சித்தி,

நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது. லஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சட்ட மசோதா கடந்த 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டு சட்டமாக்கினார். ஆனால், இதுநாள் வரையில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.

இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வராததை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அன்னா ஹசாரே கூறியதாவது:- ஊழலை தடுக்கும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. லோக்பால் அமைப்பை உருவாக்க ஏற்படும் தாமதத்திற்கு பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

உடனே லோக்பால் அமைப்பை உருவாக்கி, லோக் பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் மத்திய அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறேன். மகாத்மா காந்தி பிறந்த தினமான வருகிற அக்டோபர் 2-ந் தேதி முதல் எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன். ஊழல் இல்லா தேசத்தை உருவாக்க எனது போராட்டத்துடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்