தேசிய செய்திகள்

"தமிழ்நாட்டின் எதிர்காலம் அண்ணாமலை" - ஆந்திர துணை முதல் - மந்திரி பவன் கல்யாண்

அண்ணாமலை தற்போது புதுக்கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் புதிய ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார்.

ஐதராபாத்,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி இருக்கும்நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், அவர் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.

தமிழக அரசியலில் அண்ணாமலைக்கு மிக சிறந்த எதிர்காலம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து விலகி தனக்கான சொந்த பாதையை தேர்ந்தெடுக்கும் அண்ணாமலையின் முடிவை தான் மதிப்பதாகத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டின் எதிர்காலம்

’அண்ணாமலை போன்ற நேர்மையானவர்கள் தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து நிலைத்து நின்று செயலாற்ற வேண்டும். அண்ணாமலையின் தேசப்பற்று, கலாசாரத்தின் மீதான ஈடுபாடு, பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. அண்ணாமலை தனிப்பாதையை தேர்ந்தெடுத்தாலும், அவர் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் தலைவராகவே இருப்பார்’ என்றார்.

புதுக்கட்சி

ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் விஜய் புதுப்பாதையை வகுத்து, இளம் தலைமுறையினரின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கிறார். இந்த சூழலில், ஏற்கனவே இளைஞர்கள் வட்டாரத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்ததோடு, தமிழக அரசியலில் புது சக்தியாகவும் உருவெடுத்து வந்த அண்ணாமலை தற்போது புதுக்கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் புதிய ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார்.