புதுச்சேரி, தமிழக சட்டமன்றங் களுக்கு அடுத்த (ஏப்ரல்) மாதம் 6-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசில் புகைச்சல்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளிலும், தி.மு.க. 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுவது என உடன்பாடு செய்து கொண்டன. உடனே சூட்டோடு சூடாக தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தொடங்கியது. இந்தநிலையில் அதிக இடங்களையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் விட்டுக் கொடுத்து விட்டதாக காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சல் கிளம்பியது. வேட்பாளர் தேர்வுக்குழுவினர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் இழுபறி நீடித்து வந்தது.
காங்கிரஸ் வேட்பாளர்கள்
காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதி வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஷ்னிக் நேற்று இரவு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஊசுடு-கார்த்திகேயன், கதிர்காமம்-செல்வநாதன், இந்திராநகர்-கண்ணன், காமராஜ் நகர்-ஷாஜகான், லாஸ்பேட்டை-வைத்தியநாதன், முத்தியால்பேட்டை-செந்தில் குமரன், அரியாங்குப்பம்-ஜெயமூர்த்தி, மணவெளி-அனந்தராமன், ஏம்பலம்-கந்தசாமி, நெட்டப்பாக்கம்-விஜயவேணி, நெடுங்காடு-மாரிமுத்து, திருநள்ளாறு-கமலக்கண்ணன், காரைக்கால் வடக்கு-ஏ.வி.சுப்பிரமணியன், மாகி-ரமேஷ் பிரம்பாத்.
ஏனாம் தொகுதி வேட்பாளர் பட்டியல் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நாராயணசாமி போட்டியில்லை
கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. உழவர்கரை தொகுதியில் போட்டிட்டு வெற்றி பெற்ற துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலனுக்கு இந்த தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. கடந்த முறை காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சரான ஷாஜகான் இந்த தேர்தலில் காமராஜ் நகர் தொகுதிக்கு மாறி உள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில் அதிர்ச்சி
மற்றொரு அணியாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.மீதம் உள்ள 14 தொகுதிகளை பா.ஜ.க., அ.தி.மு.க. பிரித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது அ.தி.மு.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளை வெற்றி பெற்ற நிலையில் புதுவையில் கூடுதல்
தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் வலியுறுத்தினர்.இதனை தொடர்ந்து தமிழக அமைச்சரும், புதுவை மாநில பொறுப்பாளருமான எம்.சி.சம்பத், பா.ஜ.க. மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த முடிவும் ஏற்படவில்லை.
உடன்பாடு
இந்தநிலையில் தொகுதி பங்கீடு முடிவதற்கு முன்பாகவே நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஓம்சக்தி சேகர் வேட்புமனு தாக்கல் செய்தார்.பா.ஜ.க. சார்பிலும் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமாரின் மகன் வேட்புனு தாக்கல் செய்திருந்தார். இதனால் இந்த தொகுதி யாருக்கு? என்பதில் சிக்கல் எழுந்தது.இதனால் தாமதம் ஏற்பட்டு வந்தநிலையில் ஒருவழியாக உடன்பாடு ஏற்பட்டது. இதில் பா.ஜ.க.வுக்கு 9, அ.தி.மு.க.வுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்து இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
பா.ஜ.க. பட்டியல்
அதன்படி பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை அந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
லாஸ்பேட்டை-சாமிநாதன், மண்ணாடிப்பட்டு-நமச்சிவாயம், ஊசுடு-சரவணகுமார், காமராஜ் நகர்-ஜான்குமார், காலாப்பட்டு-கல்யாணசுந்தரம், நெல்லித்தோப்பு-வில்லியம் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், மணவெளி -செல்வம், திருநள்ளாறு-ராஜசேகரன், நிரவி திருபட்டினம்-மனோகரன்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புதுவை மாநில அ.தி.மு.க. பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
உப்பளம்-அன்பழகன், உருளையன்பேட்டை- ஓம்சக்தி சேகர், முதலியார்பேட்டை-பாஸ்கர், முத்தியால்பேட்டை-வையாபுரி மணிகண்டன், காரைக்கால் தெற்கு-அசனா.அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே இருந்த 4 எம்.எம்.எல்.ஏ.க்களுக்கும், கூடுதலாக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இதற்குமுன் 2011-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஓம்சக்தி சேகர் இந்த முறை உருளையன்பேட்டை தொகுதியில் களம் காண்கிறார்.