நகரி,
சொத்து குவிப்பு வழக்கில் கைதான அரசு அதிகாரியிடம் மேலும் 2 கிலோ தங்க நகைகள் சிக்கின.
தெலுங்கானா நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறையின் துணை இயக்குனராக இருப்பவர் நரஹரி ராவ். இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் இந்த வழக்கின் கீழ் சில இடங்களில் சோதனைகள் நடத்தினார்கள்.
நரஹரியின்மனைவி பெயரில் ஐதராபாத் சாலி பண்டா வங்கி கிளையில் இருக்கும் 2 வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிட்டனர். இதில் மீண்டும் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல 100 கிராம் எடையுள்ள 12 தங்க பிஸ்கட்டுகள் உட்பட 2 கிலோ எடை உள்ள தங்க மற்றும் வைர ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஏற்கனவே கடந்த 16-ந்தேதி நரஹரி ராவ்,வீட்டில் சோதனை நடத்தி ரூ.1.54 கோடி பணம், 1.3 கிலோ தங்கம், எட்டு கிலோ வெள்ளி ஆபரணங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐதராபாத் நகரத்தில் ரூ.150 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.