தேசிய செய்திகள்

காஷ்மீரில் சமூக விரோத கும்பல் தாக்குதல்; 18 போலீசார் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமூக விரோத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 18 போலீசார் காயம் அடைந்தனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் படோட் நகரில் ஆக்கிரமிப்பு செயலில் சிலர் ஈடுபடுகின்றனர் என காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனை அறிந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் சிலருடன் சேர்ந்து கும்பலாக காவல் துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கற்களையும் வீசி எறிந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் என 18 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி வனத்துறை அதிகாரி குல்தீப் சிங் கூறும்பொழுது, ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து சில சமூக விரோதிகள் எங்களுடைய குழுவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களையும் வீசியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.