புதுடெல்லி,
அருணாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கி கொண்டனர்.
இதனையடுத்து அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ராணுவ வீரர்களின் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.
அதில், அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். நமது நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய உயர்ந்த சேவையை நாம் ஒருபோதும் மறந்து விடமுடியாது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.