தேசிய செய்திகள்

அசாம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை சுட்டுப்பிடித்த போலீசார்

சிகிச்சைக்குப்பின் நசிருல் ஷேக் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் சிரங் மாவட்டம் பர்டொலோவா கிராமத்தை சேர்ந்த இளைஞர் நசிருல் ஷேக் (வயது 20). இவர் கடந்த மாதம் 24ம் தேதி அப்பகுதியை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நசிருல் ஷேக்கின் நண்பர்களான பீர் முகமது, ஹசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நசிருல் ஷேக் தலைமறைவாக இருந்தார்.

துப்பாக்கி சூடு - கைது

இந்நிலையில், தலைமறைவாக இருந்த நசிருல் ஷேக் பர்டொலோவா கிராமம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அங்கு சென்ற போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நசிருல் ஷேக் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.

இதையடுத்து, நசிருல் ஷேக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் சுட்டத்தில் காலில் காயமடைந்த நசிருல் ஷேக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப்பின் நசிருல் ஷேக் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.